Author: வந்தியத்தேவன்
•4:56 AM
தட்டிவான் யாழ்ப்பாணத்தில் பிரபலமான வாகனம். எனக்கு மிகவும் பழக்கப்பட்டது பருத்தித்துறையில் தொடங்கி நெல்லியடி ஊடக கொடிகாமம் போகும் தட்டிவான் தான். பிரிட்டிஷ்காரனின் தயாரிப்பு. இந்த தட்டிவானில் பயணம் செய்தால் நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.



முதலில் தட்டிவானின் வடிவமைப்பை பார்ப்போம். முன்பக்கத்தில் மட்டும் கண்ணாடியுள்ள வாகனம். மக்கள் இருக்கும் இடப்பகுதி எல்லாம் திறந்தவெளி. சாவகச்சேரி சந்தைக்கு போகின்ற குஞ்சி ஆச்சி வெத்திலை சப்பித் துப்ப ஏதுவானது. பின்பக்கத்தில் இருக்கும் பலகையில் மீன் பெட்டிகள், மரக்கறி மூட்டைகள் முடிந்தால் மனிதர்களைக்கூட ஏற்றிச் செல்லும் அதிசய வாகனம்.

எப்படியும் காலை 7 மணிக்கு நெல்லியடிச் சந்திக்கு வந்துவிடும். சனமாக இருந்தாலும் கொண்டக்டர் விடமாட்டான் அண்ணே இன்னும் கொஞ்சம் பொறுங்கோ சனம் வரட்டும் என எப்படியும் அரைமணித்தியாலம் அங்கேயே வைத்திருப்பான். பக்கத்து மொடேர்ன் ஸ்டோரில் உதயனையோ, ஈழநாதத்தையோ நின்று நிதானமாக சனம் நிறைந்தபின்னர் ஏறும்பலரைக்கண்டிருக்கின்றேன். சிலவேளை ட்ரைவரே தனக்கு தெரிந்தவர்களுக்கு இப்போ எடுக்கமாட்டான் பக்கத்து சங்குண்ணி கடையில் தேத்தண்ணி குடித்துவிட்டு வாருங்கள் என்பார்.

பெரும்பாலும் ஒரே ஆட்களே தட்டிவானில் பயணிப்பார்கள். இவர்கள் சாவகச்சேரியில் வேலைபார்ப்பவர்கள், கொடிகாமம் சந்தையில் வியாபாரம் செய்பவர்கள், என ஒரே மக்கள் செல்வதால் அவர்களுக்கு பலரையும் பழக்கமாய் இருக்கும் இதனால் ஒருவர் வரப் பிந்தினால் கூட ட்ரைவருக்கு உரிமையாக தம்பி ஆச்சி வரவில்லை சின்னத்தம்பி அண்ணை வரவில்லை கொஞ்சம் பொறுங்கள் என கூறுவார்கள்.

சீட்டுகள் பெரும்பாலும் மரத்தாலே ஆனவை. பின்னுக்கு அரைமுதுகுதான் சாஞ்சு இருக்கமுடியும். இரண்டு சீட்டுக்கு இடையில் தேவைப்பட்டால் இன்னொரு பலகை போட்டு அடிசனலாக ஆட்களை இருத்தும் கலை இவர்களுக்குத் தான் தெரியும்.

நெல்லியடிச் சந்தியில் அரைமணித்தியாலமாக உறுமிக்கொண்டே இருக்கும் சிலவேளைகளில் வெளிக்கிடுவதுபோல் எடுத்து அப்படியே பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி திரும்ப அதே நிண்ட இடத்தில் கொண்டுவந்து நிப்பாட்டுவார்கள். சிலவேளை சீரிபி தூரத்தில் வ்ருகின்றது என்றால் மட்டும் உடனே எடுத்துப்போடுவார்கள். ஆனாலும் கோயில்சந்தை, அந்தணத்திடலில் சில நிமிடங்கள் எப்படியும் நிண்டுதான் எடுப்பார்கள். திரும்ப மாலையில் கொடிகாமத்தில் இருந்து தட்டிவான் தன் பயணத்தை நெல்லியடி ஊடக பருத்துறைக்கு செல்லும்.

தொண்டைமானாறு செல்வச் சன்னதித் திருவிழா நேரத்தில் நெல்லியடியிலிருந்து கோவில் வரை ஸ்பெசல் சேர்விஸ் விடுவார்கள். அந்த அனுபவமும் சுவையானது. இதனை விட அச்சுவேலியில் இருந்தும் தட்டிவான் சில இடங்களுக்குச் செல்வது ஆனாலும் பயணம் செய்துபழக்கமில்லை. ஏனைய மாவட்டங்களில் நான் தட்டிவான் கண்டதில்லை. வவுனியா, திருகோணமலை, நுவரேலியாப் பகுதியில் சிறிய வான்களில் மக்களை அடைந்து கொண்டு செல்வதைக் கண்டிருக்கின்றேன். கஸ்டமான பயணம் என்றாலும் நம் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணிப்பார்கள்.

வட்டாரச் சொல்லில் தட்டிவான் எப்படி வரும் என எண்ணாதீர்கள். நம்ம வட்டாரத்தில் தட்டிவான் பேமஸ்.

இதேபோல் இன்னொரு வாகனமும் பேமஸ் கண்டுபிடியுங்கள் முடிந்தால் எழுதுங்கள்.
This entry was posted on 4:56 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 comments:

On June 16, 2009 at 5:39 AM , சந்தனமுல்லை said...

ஆகா..எங்க ஊரு மினிபஸ்-இன் ஓல்டர் வெர்ஷன் மாதிரி இருக்கே! நல்லாருக்கு இடுகை!

 
On June 16, 2009 at 5:54 AM , கானா பிரபா said...

கலக்கல் இடுகை வந்தி :)

யாழில் இருக்கேக்க இதில் ஏறாதவன் உண்டா இவ்வையகத்தில். பழைசக் கிளறீட்டீங்கள். தட்டி வான் படம் ஏதாவது இருந்தால் போட்டிருக்கலாம்.

 
On June 16, 2009 at 6:00 AM , வந்தியத்தேவன் said...

ஒரு படம் போட்டிருக்கின்றேன் அது மட்டும் தான் கூகுளில் தேடிக் கிடைத்தது.

 
On June 16, 2009 at 6:47 AM , உண்மைத்தமிழன் said...

பகிர்தலுக்கு நன்றி வந்தியத்தேவன்.

படித்து முடித்தவுடன் உங்களது ஊரின் நினைப்பும், தட்டிவானும் மனக்கண்ணில் வந்து வந்து செல்கிறது..

 
On June 16, 2009 at 6:48 AM , உண்மைத்தமிழன் said...

பகிர்தலுக்கு நன்றி வந்தியத்தேவன்.

படித்து முடித்தவுடன் உங்களது ஊரின் நினைப்பும், தட்டிவானும் மனக்கண்ணில் வந்து வந்து செல்கிறது..

 
On June 16, 2009 at 7:02 AM , M.Rishan Shareef said...

அன்பின் கானாபிரபா,

அருமையான பதிவு. மிக ஆசையாகப் படித்தேன். இப் பயண தூரமும் நேரமும் சொல்லவில்லையே ?

மலைசார்ந்த எங்களூர்களில் நேரான பாதை கிடையாது. வளைவுகளும், மேடு பள்ளங்களும் அதிகம். ஆகவே இதுபோன்ற தட்டிவான் அங்கிருந்தால், பாதிப்பேர் நடு வீதியில் அதிலிருந்து விழுந்திருப்பர்.:)

அந்த மற்ற வாகனம் மாட்டுவண்டியா? எனக்கு அதில் மாடுகள் 'சலங் சலங்' எனச் சப்தமெழுப்பப் பயணிக்கவேண்டுமென்று ஆசை நண்பரே !

பகிர்வுக்கு நன்றி !

 
On June 16, 2009 at 7:29 AM , வாசுகி said...

பாடசாலை நிகழ்ச்சி ஒன்றிற்காக தட்டிவானில் பயணம் செய்தது ஞாபகம் இருக்கிறது.
தாராளமான காற்று வசதி கொண்டது என்பதால் பயணம் வழமைக்கு மாறாக நன்றாக இருந்தது.

வழமையாக மினிவானில் தானே எல்லோரையும் அடைந்து கொண்டு போவார்கள்.மூச்சு கூட விட முடியாமல் இருக்கும்.அவர்களையும் குற்றம் சொல்லமுடியாது தான். வாகன வசதி இருக்கவில்லை.

 
On June 16, 2009 at 8:36 AM , வந்தியத்தேவன் said...

ரிஷான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுக்கும் சாதாரணமாக அரைமணித்தியாலத்தில் செல்லவேண்டிய தூரத்திற்க்கு இதில் போவதென்றால் ஒருமணித்தியாலம் தேவை.

மாட்டுவண்டி அல்ல இன்னொரு வாகனம். மாட்டுவண்டியில் பயணம் செய்வதும் ஒரு சுகானுபவம் என்ன பாவம் மாடுகள்.

 
On June 16, 2009 at 11:05 AM , மலைநாடான் said...

வந்தியத் தேவன்!
'தட்டிவான்' வடமாராச்சி - தென்மாராட்சிக்கான சிறப்பு மக்கள் சேவை என்றே சொல்லலாம். மினி பஸ் எனும் பின்னைய நவீன வாகனங்கள் சேவைக்கு வந்தபின்னும், தட்டிவான்கள் பாவனையில் இருந்தது, அவற்றின் சிறப்பான மக்கள் சேவைக்கு எடுத்துக்காட்டு. பருத்தித்துறையிலிருந்து, கொடிகாமம் வரை ஒரு சேவை, அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறைவரை மற்றுமொரு சேவை என இரு பகுதிகளில் நடந்தது. இது தவிர வேறுபகுதிகளில் தட்டிவான்கள் புழக்கத்திலிருந்ததாகத் தெரியவில்லை.
ஏறக்குறைய இதே மாதிரி ஒரு வாகனசேவை, திருகோணமலையில் நடந்தது. திருமலை நகரத்திலிருந்து அன்புவழிபுரம் வரை போகும். இதுவும் தட்டிவானுக்குரிய அதே பண்புகளைக் கொண்டிருக்கும். உருவத்தில் சற்றுச் சிறிது. இது பெற்றோலில் இயக்கத் தொடங்கி, மண்ணெண்ணையில் தொடர்ந்து ஓடுவதால், இதற்கு மண்ணெண்ணை வான் என்றும் பெயருண்டு. இவற்றை ஓட்டுவதற்கு ஒரு தனித்திறமை வேணும்.

நீங்கள் குறிப்பிடும் மற்ற வாகனம் 'சந்தைக் கார்' என்று நினைக்கின்றேன்.
மற்றும்படி உங்கள் இடுகை நிறைவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 
On June 16, 2009 at 6:36 PM , சினேகிதி said...

மற்ற வாகனம் லான்மாஸ்ரர்????

 
On June 16, 2009 at 6:59 PM , யசோதா.பத்மநாதன் said...

உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது.படம் இன்னும் சிறப்புச் சேர்க்கிறது.

வசதி குறைவாக இருந்தாலும் எவ்வளவு மகிழ்ச்சியாக அங்கிருந்தோம் இல்லையா!அது ஒரு அழகிய பொற்காலம்.

தட்டி வானும் அதற்கூடாக நீங்கள் வெளிக் கொணர்ந்த யாழ்ப்பாணத்து வாழ்வியலும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

அந்த உறவை- அன்னியர் என்றாலும் அதில் நாம் உணர்கின்ற நெருக்கத்தை-இப்படி நாம் இழந்தது நிறைய!!

நீங்கள் சொல்கிற இன்னொரு வாகனம் ம்ம்ம்.....ம்ஹூம் தெரியவில்லை :(

 
On June 16, 2009 at 9:17 PM , வந்தியத்தேவன் said...

//வாசுகி said...
வழமையாக மினிவானில் தானே எல்லோரையும் அடைந்து கொண்டு போவார்கள்.மூச்சு கூட விட முடியாமல் இருக்கும்.அவர்களையும் குற்றம் சொல்லமுடியாது தான். வாகன வசதி இருக்கவில்லை//

உண்மைதான் வாசுகி மினிவானைவிட காற்றுவசதி தட்டிவானில் அதிகம். இதெல்லாம் பழைய நினைவுகள் மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்குமா என்பது சந்தேகமே.

 
On June 16, 2009 at 9:20 PM , வந்தியத்தேவன் said...

மலைநாடான் உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள். திருகோணமலை மினி அன்புவழிபுரம் மினிபஸ் சேவைபோல் வவுனியாவிலும் குருமன்காட்டினூடாகச் கிடாய்ச்சூரிக்கு செல்லும் ஒரு மினிபஸ் சேவையும் பிரபலம். இதேபோல் புசல்லாவையிலிருந்து புரட்டாசி எனப்படும் புரட்டோஸுக்கு செல்லும் மினி பஸ் ஆபத்தான மலைவளைவுகளில் செல்லும்போது தென்படும் காட்சிகள் அழகாக இருக்கும்.

சந்தைக்கார் அல்ல.

 
On June 16, 2009 at 9:21 PM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...
மற்ற வாகனம் லான்மாஸ்ரர்???//

மிகவும் சரியான விடை. லான்மாஸ்ரரும் மறக்கமுடியாத வாகனம்.

 
On June 16, 2009 at 9:29 PM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
வசதி குறைவாக இருந்தாலும் எவ்வளவு மகிழ்ச்சியாக அங்கிருந்தோம் இல்லையா!அது ஒரு அழகிய பொற்காலம்//

ம்ம்ம் (பெருமூச்சு) அது ஒரு அழகிய காலம். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அந்த மகிழ்ச்சி இனி எங்கேயும் கிடைக்காது. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா.

இதற்கான காரணம் எங்கள் பிரதேசங்களில் பெரும்பாலும் எமது வாழ்க்கை இயற்கையுடனையே ஒட்டி இருக்கும். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வாழ்க்கைபோல் நான் திருகோணமலையிலும் வவுனியாவிலும் மன்னாரிலும் ஏன் ஹட்டனில் கூட அனுபவித்திருக்கின்றேன். இதுவரை மட்டக்களப்பு அம்பாறை செல்லவில்லை ஆகையால் அங்கேயுள்ள வாழ்க்கை தெரியாது.

ஊரில் வேலிகளும் ஆடுகளும் மாடுகளும் வண்டில்களும் தரும் இன்பம் ஏசி வீட்டிலும் பெரிய ஷாப்பிங் மாலிலும் கூட கிடைக்காது.

இந்த வலையினூடாக எங்கள் வாழ்க்கையில் இறந்தகால இனிமையான‌ பதிவுகளையும் எழுதவேண்டும், எழுதுங்கள்.

 
On June 16, 2009 at 10:12 PM , M.Rishan Shareef said...

அன்பின் வந்தியத்தேவன்,

பதிவு அருமை நண்பரே !

 
On June 16, 2009 at 11:39 PM , மலைநாடான் said...

பிரபா!
லே அவுட்டில் align="center" செட்டப்பை எடுத்து விடுங்கள். பயைர்பொக்ஸ் பழைய பதிப்புக்காறருக்கு வாசிக்க முடியுதில்லையாம்

 
On June 17, 2009 at 3:19 AM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

////சினேகிதி said...
மற்ற வாகனம் லான்மாஸ்ரர்???//

மிகவும் சரியான விடை. லான்மாஸ்ரரும் மறக்கமுடியாத வாகனம்.//

அது பற்றிச் சொல்லுங்களன்.. இன்டைக்குத்தான் கேள்விப்படுறன்

 
On June 17, 2009 at 6:37 AM , சினேகிதி said...

///சினேகிதி said...
மற்ற வாகனம் லான்மாஸ்ரர்???//

மிகவும் சரியான விடை. லான்மாஸ்ரரும் மறக்கமுடியாத வாகனம்.//

\\அது பற்றிச் சொல்லுங்களன்.. இன்டைக்குத்தான் கேள்விப்படுறன்
\\
அதுபற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்...கொஞ்ச நேரம் வெயிற் பண்ணுங்கோ.

 
On June 17, 2009 at 2:09 PM , கலை said...

தட்டிவான், ஆஹா நல்ல காற்றோட்டமான பயணம் :). அதைக் கூட கூகிளில் தேட முடியுதா? ஆச்சரியமாத்தான் இருக்கு.

 
On June 17, 2009 at 4:21 PM , ஆபிரகாம் said...

கடந்த ஒரு சில ஆண்டுகளிற்கு முன்னர் கூட அதன் பயன்பாடு இருந்தது... நெல்லியடி-கொடிகாமம் பயனித்ததாக நினைவு!
லாண்ட்மாஸ்டர்-பல தேவைகளிற்கு பயன்படுத்தும்.. மாட்டுவண்டியின் எமன் என்று கூட சொல்லலாம்!

 
On June 17, 2009 at 6:30 PM , Anonymous said...

வந்தியத்தேவன்,

தொண்ணூறாம் ஆண்டில நெல்லியடில சைக்கிள விட்டிட்டு, தட்டி வான்ல ஏறிப் பள்ளிக்கூடம் போன ஞாபகங்களக் கிளறி விட்டிட்டீங்கள்.
தொண்ணூற்றாறில கிளிநொச்சிலயும் தட்டி வான் ஓடினதா ஞாபகம்.

ஜனா