Author: யசோதா.பத்மநாதன்
•1:42 AM
19.06.09 வெள்ளிக் கிழமை இண்டைக்கு. ஈழத்து முற்றக்காரர் எல்லாரும் இண்டைக்கு எனக்குச் சொந்தமாப் போச்சினம்.சொந்த பந்தம் எண்டு இருக்கிறது எவ்வளவு சந்தோஷம்!இண்டைக்கு அவை எல்லாரும் என்னட்ட வந்தாலும் வருவினம்.நான் அவைய வரவேற்கத்தானே வேணும்.

அதால இருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே! முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைச்சு,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.

பால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ஞ்சு தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.

தூரத்தில கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெத்தீல கையில மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி றோட்டில எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிற நித்திய கல்யாணிச் செடியள் பூத்திருக்கிறதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்ரை பைக்குள் அதுகளப்போட்டுக் கொண்டு அவர் நடந்து போறார்.

பள்ளிப் பிள்ளைகளும் இப்ப பள்ளிக் கூடம் போகத் தொடங்கி விட்டுதுகள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.

எங்கட ஐயாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.

வெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு அம்மா வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.

இண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத்
தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.

ஐயாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.

இனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வளவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே!நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.

அடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.

அது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே? அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்வி மாட்டுக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு அம்மா அதச் செய்தாலும் செய்வா.

இஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்வி குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கண்டுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து,மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.

நீங்கள் எல்லாரும் வாருங்கோ! உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.

நீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே? நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.


குறிப்புகள்:


செட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட

சாம்பிராணி - அகில்

பொறுக்கி - கைகளால் ஒன்றொன்றாக எடுத்தல்

அம்மான் - மாமா

பொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி/பெட்டை

சொல் வழி - புத்திமதி

கேளான் - கேட்க மாட்டான்

சொச்சமாக - கிட்டத்தட்ட

கொட்டுண்டு - சிந்துப் பட்டு

ஆய்ந்து - பிடுங்கி

காணன் - காணவில்லை

வீபூதி - திருநீறு

பள்ளி - பாட சாலை

சர்வகலாசாலை - பல்கலைக் கழகம்

குருத்துகள் - இளம் பிள்ளைகள்

புலவு - தோட்டம்

முதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து

சங்கதி - புதினம், செய்தி,விடயம்

அசண்டையீனம் - கவலையீனம்

கதியால் - வேலி

காம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.

உழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி

அலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்

பிரயாசை - முயற்சி

புளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்

பாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்

வெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.

பாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்

பிலாக்கணம் - புறுபுறுத்தல்

பூராடம் - விடுப்பு,விண்ணாணம்

கோடி - கொல்லைப் புறம்

பொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து

உண்ணாணை - உன் மீது ஆணையாக

எப்பன் - கொஞ்சம்

வளவு - காணி

சவர் - உப்பு

எல்லே - அல்லவா

ஏலாது - முடியாது

மே(மோ)ள் - மகள்

பாவாடை - முழங்கால் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை

எக்கணம் - இக்கணம், இப்ப

துள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்

போகேக்க - போகும் போது

களு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)

மாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்

சருவம் -அகன்ற பாத்திரம்

மூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)

அன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.

ஆரவாரம் - ஆர்ப்பரிப்பு

( இவை யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)

ஏனைய பிரதேசங்களின் காலை, மாலை நேரங்களையும் ஆண்களின், பெண்களின் சிறுவர்களின் வாழ்க்கை முறைகள், எண்ணப் பாங்குகள் பற்றியும் அறிய ஆவல். இது முன்பொரு முறை என் பதிவொன்றில் எழுதப் பட்டது தான். சிறு மாற்றங்களோடு அறிமுகப் பதிவாக இங்கு இடப் படுகிறது.

48 comments:

On June 19, 2009 at 2:32 AM , வந்தியத்தேவன் said...

ஆஹா அப்படியே காலையில் கோயிலுக்குப்போய் பிறகு பள்ளிக்குடம் போன அனுபவத்தைக் கொடுத்தது உங்கள் பதிவு. உங்கட வீட்டை வந்த எனக்கு பனக்கட்டியுடன் தேத்தண்ணி தருவியளோ? கேட்டுக்குடிக்கிறேன் என குறை நினையாதையுங்கோ உங்கட கதையை வாசிச்சு களைச்சுப்போனன்.

 
On June 19, 2009 at 2:47 AM , யசோதா.பத்மநாதன் said...

:-)அதுக்கென்ன மோனை.கீரிமலைக்குப் போய் வரேக்கை வாங்கின பனங்கட்டிக் குட்டான் இருக்கு.குடிச்சிட்டே போகலாம்.

அது சரி மோனை நல்லாக் களைச்சுப் போனியேணை?:))

(இது பாட்டிமாரின் பேச்சு வழக்கு)

 
On June 19, 2009 at 3:01 AM , வந்தியத்தேவன் said...

ஓம் ஆச்சி நல்லாக் களைச்சுப்போனன் :) இந்த வயசிலும் நல்லா எழுதுறானை

 
On June 19, 2009 at 3:16 AM , யசோதா.பத்மநாதன் said...

:))).

ம்ம்... எப்பிடி இருந்தனாங்கள் மோனை!அத விடு ராசா.

நீ கீரிமலைக்குப் போயிருக்கிறியே மோனை? அதப் பற்றிக் கொஞ்சம் சொல்லன் ராசா.எல்லாரும் விருப்பப் படுவினம்.

 
On June 19, 2009 at 5:08 AM , சி தயாளன் said...

ஆச்சி...மத்தவை எல்லாம் ஒவ்வொரு சொல்லா போட்டு விளக்கம் தரேக்க, நீங்க ஒரு நாள் காலமை யாழ்ப்பாண வீட்ட நடக்கிறத எங்கட வழக்கில் சொல்லி சிக்ஸர் அடிச்சிட்டியள்...

 
On June 19, 2009 at 6:47 AM , வாசுகி said...

ஆகா இத்தனை சொல்லை ஒரு பதிவிலேயே சொல்லிப்போட்டியள்.
ஊரில வீட்டில நிக்கிற மாதிரி உணர்வு வந்திச்சுது.
ஈழத்து முற்றத்தை வாசிக்க வாசிக்க ஊருக்கு போக வேணும் என்று ஆசை
கூடிக்கொண்டே போகுது.
விடியக் வெள்ளன பறவைகள் போடுற சத்தம் கேட்கிறதே ஒரு தனி சுகம்.

//வழவு - காணி//
வளவு என நினைக்கிறேன்.????

பதிவு நல்லா இருக்குது.

 
On June 19, 2009 at 6:56 AM , Mark K Maity said...

ithupoola oru artilce muthusam enda thalaipila irukkiram sanchikail vantahtu. ungal pathviu mika arumai.

 
On June 19, 2009 at 7:33 AM , சினேகிதி said...

பாட்டி நீங்கள் மணிப்பாட்டியா இருக்கிறீங்கள்....இந்த வாங்கு வாங்கிறீங்கள். எனக்கு கற்கண்டு போட்டு காய்ச்சின பாலோட கடும்பும் வேணும். உங்கட ஆடு இல்லாட்டி மாடு எப்ப கண்டு போடும் என்று சொல்லுங்கோ நான் வாறன்.

மற்றது பாட்டி நீங்கள் என்ர அம்மம்மான்ர வீடு கோயில் அங்க நிக்கிற பொன்னொச்சி மரம் தேமா குண்டு மல்லிகை நந்தியாவெட்ட எல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டிங்கிள்.....எல்லாரையும் ஏத்திப்போக கப்பல் வருமா?

 
On June 19, 2009 at 8:32 AM , கானா பிரபா said...

முதல் பதிவு கலக்கலான பதிவு, தொடருங்கள்.

 
On June 19, 2009 at 8:50 AM , சயந்தன் said...

அப்பிடியே உரிச்சுப்படைச்சு எங்கடை மம்மம்மா கதைக்கிறதைக் கேட்குமாப்போலை இருந்தது. நன்றி

 
On June 19, 2009 at 12:01 PM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
:))).

ம்ம்... எப்பிடி இருந்தனாங்கள் மோனை!அத விடு ராசா.

நீ கீரிமலைக்குப் போயிருக்கிறியே மோனை? அதப் பற்றிக் கொஞ்சம் சொல்லன் ராசா.எல்லாரும் விருப்பப் படுவினம்//

ஆச்சி நான் எட்டாம் ஆண்டு படிக்கேக்கை ஒருக்கா கீரிமலை போயிருக்கிறன் பிறகு தெரியும்தானே நாட்டுபிரச்சனை கீரிமலைப்பக்கம் தலையே வைக்கவில்லை. கேணிலை குளிச்சதும் கடலில் கால் நனைத்ததும் மட்டும் நினைவாயிருக்கனை. எங்கட வடமராட்சி பற்றி ஏதும்கேட்டால் எழுதலாம். உப்படி உப்படி ஒவொருத்தரும் ஊர் உளவாரங்களை எழுதினால் நல்லதுதானே.

எங்கட மழை அக்கா ஒருக்கா மட்டக்களப்பில் பாயுடன் சுருட்டுகிற கதை எழுதவேண்டும். என்ரை கூட்டாளி ஒருத்தன் முந்திச் சொன்னவன் எனக்கு நம்பேலாமல் போச்சு.

 
On June 20, 2009 at 12:31 AM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள டொன் லீ யே!

எனக்கென்னடா தெரியும் மோனே,ஏதோ தெரிஞ்சதச் சொன்னன்.கூடிப் போச்சுதோ தெரியாதெண்டுதான் கொஞ்சம் யோசினை!

இப்பிடி இளம் பிள்ளையள் வந்து கதைக்கேக்க எவ்வளவு சந்தோசம் ராசா!ஏதோ ஊரில இருக்கிற மாதிரி ஒரு சந்தோசம்!

 
On June 20, 2009 at 12:47 AM , யசோதா.பத்மநாதன் said...

என்ர பிள்ள வாசுகி,

வாபிள்ள வா!உண்ணாணப் பிள்ள நீ சொல்லுறது சரி தானெணை.பறவையள் போடுற சத்தம் மட்டுமே?பனையோலை உரஞ்சுப் படுற சத்தம்,பசுவும் கண்டும் கூப்பிட்டுக் கொள்ளுற சத்தம், முத்தத்தில தண்ணி தெளிக்கிற சத்தம்,கோயில் மணிச்சத்தம்...இப்பிடி எத்தின பிள்ள.

ஆனா ஒண்டு மோன,இப்பிடிக் கதைக்கிறதே மெத்தச் சந்தோசம் தானே!

அது சரி, அது வளவு தான் பிள்ள.எனக்கும் வயசு நல்லாப் போட்டுது.இனி உப்பிடித் தான் மாறாட்டங்கள் வரும். வந்து சரிப் படுத்திப்போடு பிள்ள.

 
On June 20, 2009 at 12:53 AM , யசோதா.பத்மநாதன் said...

மார்க் அவர்களுக்கு,

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்து எங்கள் முற்றத்திற்கு வந்து போங்கள்.

அந்தச் சஞ்சிகை எனக்கு வாசிக்கக் கிடைக்க வில்லை.அது ஈழத்திலிருந்து வெளி வந்த சஞ்சிகையா?

 
On June 20, 2009 at 1:11 AM , யசோதா.பத்மநாதன் said...

என்ர ராசாத்தி சினேகிதியே,சுகமா இருக்கிறியேடி தங்கம் ? என்னப் பாக்க வந்திட்டாய்!

உனக்கில்லாத கடும்பே பிள்ள? வேற என்னென்ன வேணும் எண்டு சொல்லு தங்கம். நான் எப்பாடு பட்டாலும் செய்து உவங்கள் ஆரும் வரேக்கயாவது குடுத்து விடுவன்.

மஞ்சள் நிறப் பொன்னொச்சி,நல்ல வாசமான தேமா,எவ்வளவு குளிர்மையான பவள மல்லி,நந்தியாவெட்டை ஆகா!என்ன சோக்கான பூக்கள் பிள்ள!!

நான் உயிரோட இருக்கேக்கை அப்பிடி கப்பல் ஓடுற ஒரு காலம் வருமே ராசாத்தி? அப்பிடி வந்தா என்னையும் மறக்காமல் கூட்டிக் கொண்டு போ மோணை.

மணியக்கா மணியக்கா எண்டு அங்க எல்லாரும் என்னக் கூப்பிடுவினம்.மணிப் பாட்டியாயாவது நான் அங்க போய்ச் சாக வேணும் ராசாத்தி. என்ன மறந்து போயிடாதையணை.

 
On June 20, 2009 at 1:13 AM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி பிரபா.

உங்கள் விமர்சனத்தைத் தொடர்ந்து தாருங்கள்.

 
On June 20, 2009 at 1:16 AM , யசோதா.பத்மநாதன் said...

ஓம் பிள்ள சயந்தா.நானும் உன்ர அம்மம்மா தான் ராசா.

 
On June 20, 2009 at 1:35 AM , யசோதா.பத்மநாதன் said...

ராசா வந்தி,நீ கீரிமலையில அந்த நகுலேஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்கிறியே ராசா?

நாங்கள் முந்தி பிள்ளையள் கொழும்பால லீவுகளுக்கு ஊருக்கு வந்தா ஒரு தூக்குச் சட்டியில அரப்பு எல்லாம் அவிச்சு எடுத்துக் கொண்டு போறது ராசா.அங்க ஆம்பிளயளுக்கு ஒரு கேணி, பொம்பிளயளுக்கு ஒரு கேணி, பிறகு கடல், வாய்க்கால் எண்டு குளிக்க எவ்வளவு திறமான இடம் தெரியுமே?

அது மட்டுமே ஒரு மாபிள் எல்லாம் பதிச்ச திறந்த மடம் ஒண்டிருக்கு. அதில நல்ல காத்தோட்டம். நல்ல கடல் காத்து.

ஆனா நான் என்ர பிள்ளயள கேணிக்கை குளிக்க விடுறயில்ல. வாய்க்காலுக்க தான்.அதுக்க நல்ல அளவான தண்ணி.படியளும் கேணிக்க மாதிரிக் கட்டிக் கிடக்கு.கடலுக்கை இருந்து அதுக்கால தான் கேணியளுக்குத் தண்ணி போறது.

எல்லாருக்கும் அரப்பைப் பிரட்டி முழுக வாத்துப் போட்டு அதில நகுலேஸ்வரர் கோயிலுக்கும் போட்டு அதில ஆச்சி மார் கடலையும் சோளன் பொரியும் சின்னச் சின்னக் குட்டானுக்கை வீட்டில செய்த பனங்கட்டியளும் விப்பினம்.அது என்ன சுவை தெரியுமே? அதையும் வாங்கிக் கொண்டு வீட்ட வாறது.

கீரிமலைக்கெண்டு பஸ் எல்லாமெல்லே ஓடுறது!

அது சரி ராசா, இதுவும் கொஞ்சம் கூடிப் போச்சுது. களைச்சுப் போனியே மோனை?

 
On June 20, 2009 at 3:48 AM , மலைநாடான் said...

ஆச்சி! அருமை அருமை..அது சரி அப்பம் சுடுவியளோ..?

 
On June 20, 2009 at 3:50 AM , மலைநாடான் said...

கீரிமலைக் கதை சொல் வாறன் கொஞ்சம் பொறுக்கவாக்கும்..

 
On June 20, 2009 at 4:24 AM , யசோதா.பத்மநாதன் said...

அட, எங்கட மல நாடானே, எங்க ராசா நிண்டனி இவ்வளவு நேரமும்?

முந்தின காலத்தில உந்தப் பாலப்பம் எல்லாம் சுட்டது தான்.இப்ப உவங்கள் எல்லாம் கொலஸ்ரோல் அது,இது எண்டு ஒண்டும் செய்ய விடுறேயில்ல.

விருப்பமெண்டாச் சொல்லு மோனை.ஒரு நாளைக்குச் செய்து வரக் காட்டி விடுறன்.எப்பாலும் இருந்திட்டு ஒரு நாளைக்குத் தானே! அது கொலஸ்ரோல் ஒண்டுஞ் செய்யாது.

என்ர நெஞ்சில பால வாத்தாய் ராசா. உந்தப் பிள்ளயளுக்கு ஒருக்கா வந்து இந்தக் கீரிமலையைப் பற்றி ஒருக்கா சொல்லி விடு ராசா!

 
On June 20, 2009 at 5:06 AM , கொழுவியின் கொள்ளுப்பேரன் said...

கீரிமலையா..
அதென்ன.?
சிவனொளிபாதமலையை விட பெரிசா இருக்குமா...

 
On June 20, 2009 at 4:54 PM , யசோதா.பத்மநாதன் said...

உதாருது ராசா கொள்ளுப் பேரனோ?நல்லொரு கேள்வி கேட்டாய் மோனே,

மலை எண்டு முடிஞ்ச உடன மலை எண்டு கொள்ளக்கூடாது.யாழ்ப்பாணத்தில நான் அறிஞ்சு ஒரு மலையுமில்ல.இது ஒரு கடலுக்குக் கிட்ட இருக்கிற குளிக்கிற பகுதி ராசா.

கீரிமலை எண்டு பேர் வந்ததுக்கு ஒரு காரணமுமிருக்கு.கொஞ்சம் பொறு ராசா. உவன் பிள்ள மலைநாடான் வந்து விளக்கமா எல்லாம் சொல்லுவான்.

ஆனா இந்த மலையின்ர அழகப் பாக்கிறதுக்கெண்டா நீ திருகோண மலைக்கும் கண்டிக்கும் போக வேணும் ராசா.

குளிக்கிறதுக்கு கீரிமலையை விட இன்னொரு திறமான இடம் கந்தளாய் வென்னீரூற்று எண்டும் கொல்லுகினம்.அது தமிழ் பகுதியோ தெரியாது.நான் அங்க போயும் இல்லை. ஆனா அங்க 7 கிணறு இருக்கெண்டும் அந்த 7 கிணத்திலும் 7 விதமான பதத்தில சுடு தண்ணீல இருந்து கொதி தண்ணி வரை இருக்கெண்டும் கேள்விப் பட்டிருக்கிறன்.

 
On June 20, 2009 at 8:33 PM , வலசு - வேலணை said...

ஆகா!
அருமையான பதிவு.
அந்த நாள் ஞாபகங்களை அப்படியே நினைவு படுத்தியது.
நன்றி.
எனக்கு ஒடியல்கூழ் குடிக்கோணும் போல இருக்கணை. காய்ச்சிகால் என்னையும் கூப்பிடுவியளே ஆச்சி?

 
On June 21, 2009 at 12:27 AM , யசோதா.பத்மநாதன் said...

ஐயோ ராசா வலசு,கூழோ? ஒடியல் கூழோ? அதுக்கு எத்தினை அடுக்குப் பண்ண வேணும் ராசா.

எல்லாம் வாங்கிப் போடலாம்.உந்தப் பிலா இலைதான் இஞ்ச எடுக்கிறது வலு கஸ்ரம் மோனை.அதால கோலித்தானே குடிக்க வேணும்.வேலணையால வரேக்க எடுத்துக் கொண்டு வர ஏலுமே?

அது சரி எங்க உந்தப் பிள்ளயள் எல்லாம் போட்டுதுகள்? ஒருதரும் வரக் காணன்!

உந்த ஒடியல் கூழப் பற்றியே ஒரு பதிவு போடலாமே!

 
On June 21, 2009 at 2:14 AM , மலைநாடான் said...

//குளிக்கிறதுக்கு கீரிமலையை விட இன்னொரு திறமான இடம் கந்தளாய் வென்னீரூற்று எண்டும் கொல்லுகினம்.அது தமிழ் பகுதியோ தெரியாது.நான் அங்க போயும் இல்லை. ஆனா அங்க 7 கிணறு இருக்கெண்டும் அந்த 7 கிணத்திலும் 7 விதமான பதத்தில சுடு தண்ணீல இருந்து கொதி தண்ணி வரை இருக்கெண்டும் கேள்விப் பட்டிருக்கிறன்.//

ஆச்சிக்கு வயசு போச்சுதெண்டதுக்காக கன்னியா வெந்நீரூற்ற கந்தளாயில என்டு சொல்லப்படாது. கன்ணியாவ கிண்ணியா என்டும் சிலர் சொல்லுறவ. அதுவும் பிழை. கன்னியா பற்றித் தெரிய வேணுமென்டா கன்ணியா இங்க பாருங்க

 
On June 21, 2009 at 2:42 AM , மலைநாடான் said...

மணிமேகலா!
நீங்கள் ஏ.இ. மனோகரனின் பொப் பாடல்கள் கேட்டிருந்த ஆளாயின், " கன்னியா வெந்நீரூற்றும், கலங்கரை ஒளிவிளக்கும், இயற்கைத் துறைமுகம்தானே.." என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். இதைவிட போராளிகளின் அருமையான பாடல் ஒன்றும் இருக்கிறதென்று நினைக்கின்றேன் . ஞாபகத்துக்கு வரவில்லை.

 
On June 21, 2009 at 6:09 AM , யசோதா.பத்மநாதன் said...

உடனடியாகத் தவறைத் திருத்தியதற்கு நன்றி நண்பரே!தவறுக்கு வருந்துகிறேன்.

உங்கள் இணைப்பு உபயோகமுள்ள பல தகவல்களைக் கொண்டுள்ளன.

அவற்றுக்கும் நன்றி.

 
On June 21, 2009 at 6:17 AM , யசோதா.பத்மநாதன் said...

உண்மையில் அந்தப் பொப் பாடலின் ஞாபகத்திலிருந்து தான் அந்தத் தகவலை வழங்கியிருந்தேன்.

ஞாபகத்திலேயே அவ்விடம் அப்படித் திரிந்து விட்டிருந்தது தான் பெரிய சோகம்.

குறை விளங்கற்க!

 
On June 23, 2009 at 11:17 AM , சினேகிதி said...

என்ன பாட்டி இவ்வளவு பேருக்கும் விருந்து குடுத்து களைச்சுப் போனீங்கிளே?? வேணுமென்டால் நான் உங்களுக்கு தேத்தண்ணி போட்டுத்தாறன் ஆனால் நீங்கள் எனக்கு பழஞ்சோறு குழைச்சுத்தரோணும் மிளகாய்ப் பொரியலோட:)

 
On June 23, 2009 at 3:37 PM , யசோதா.பத்மநாதன் said...

என்ர ராசாத்தி! வந்திட்டியேடி தங்கம்?எங்க ராசாத்தி போனனி இவ்வளவு நேரமும்?உன்னப் பாத்துப் பாத்து என்ர பாத்த கண்ணும் பூத்துப் போச்சு.

சுகமா இருக்கிறீயேடி செல்லம்?நீ வந்ததோட என்ர களைப்பெல்லாம் பறந்து போச்சுதடி மோன.

இரு,இரு நான் இப்பவே எல்லாம் குழைச்சு உருட்டி உருட்டித் தாறன்.நீ அந்த வாழை இலைத் துண்டு ரெண்டு கிழிச்சுக் கொண்டு ஓடி வாணை.

 
On June 23, 2009 at 7:08 PM , வந்தியத்தேவன் said...

//நீ அந்த வாழை இலைத் துண்டு ரெண்டு கிழிச்சுக் கொண்டு ஓடி வாணை.//

ஆச்சி வாழை இலைத்துண்டைவிட பூவரசம் இலையில் சாப்பிட்டால் நல்ல உரிசையாக இருக்கும்.

 
On June 24, 2009 at 2:53 AM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள வந்தி,

அட நீயும் வந்திட்டியே ராசா!வா,வா, பின்ன நீயும் ரண்டு பூவரசிலையைக் கொய்து கொண்டு வாவன்!

சொன்னாப் போல,நல்லொரு வன்னியில் கதை ஒண்டு இருக்கு ராசா,நான் 1976ம் ஆண்டு ஆறாம் வகுப்பில(?) படிச்சது.

வன்னியில் பள்ளிப் பிள்ளை ஒண்டின்ர பாமர மனசுக்கால அதுகளின்ர வாழ்க்க முறை சொல்லுப் படுகுது ராசா,அருமையான கதை.

நீ களைச்சுப் போனன் எண்டிட்டு ஓடி விடுவியோ எண்டு தான் யோசினையாக் கிடக்கு.

 
On June 24, 2009 at 3:21 AM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ளையள், நீங்கள் எல்லாரும் நல்ல மன சந்தோஷத்தோட இருக்கிறியளே? கன நாளா ஒருத்தரையும் காணயில்ல அது தான் யோசினையாக் கிடக்கு.

எல்லாரும் சந்தோஷமா இருக்க வேணும் ராசாக்கள்.நாங்கள் இருக்கிற காலம் கொஞ்சம்.இருக்கேக்க நாங்கள் சந்தோஷமா இருக்க வேணும். நீங்கள் சந்தோசமா இருந்தாத் தான் நானும் சந்தோசமா இருக்கலாம்.

ஒவ்வொரு மனக் குறையளுக்குள்ளயும் ஒவ்வொரு வலி இருக்கத் தான்செய்யும் பிள்ளயள்.உதுகள் எல்லாம் வளரவுக்கு முன்னம் மாறிப் போடும்.உதுகள எல்லாம் பெரிசா எடுக்கிறதே!எங்கட நோக்கத்த மறந்து போறதே?

கோவங்கள விட்டுப் போட்டு வாங்கோ ராசாக்கள்.எல்லாரும் ஒண்டா இருக்கேக்க எவ்வளவு சந்தோஷம் சொல்லுங்கோ!

உந்த மட்டக்களப்புத் தொதல்,திருமலை வாழ்க்கை,மலையக எழில் இதுகள எல்லாம் அறிய எவ்வளவு ஆசையா இருக்கு!சொல்லுங்கோ பாப்பம்!!

நீங்கள் எல்லாரும் வந்தியள் எண்டா உவன் பிள்ள வலசுவும் கூழ் வேணும் எண்டு கேட்டுக் கொண்டிருந்தவன்.எல்லாருக்குமாச் சேத்து ஒரு கூழ் பதிவே போட்டிடலாம்.

என்ர பிள்ளயள் எல்லே! எல்லாரும் ஓடி வாருங்கோ!!

 
On June 24, 2009 at 6:09 AM , வலசு - வேலணை said...

//
நீங்கள் எல்லாரும் வந்தியள் எண்டா உவன் பிள்ள வலசுவும் கூழ் வேணும் எண்டு கேட்டுக் கொண்டிருந்தவன்.எல்லாருக்குமாச் சேத்து ஒரு கூழ் பதிவே போட்டிடலாம்.
//
ஆச்சி!
சும்மா சொல்லிக் கொண்டிராமல் கூழ்காச்சுற அடுக்கப் பண்ணுங்கோ!
நான் வடலியோலையில “பிளா” செய்துகொண்டு வாறன்

 
On June 24, 2009 at 7:11 AM , யசோதா.பத்மநாதன் said...

ஒன்றுக்கு மூன்று பதிவுகள் வந்து விட்டன பார்த்தீர்களா?

மகிழ்ச்சியாக இருக்கிறது.

:))!

 
On June 24, 2009 at 5:12 PM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள வலசு.

சொன்னது போல செய்து போட்டாய் மோனை!

சந்தோசம்! சந்தோசம்!!

:).

 
On June 24, 2009 at 6:58 PM , snegethy said...

என்னணை நான் வாழை இலை கொண்டு வரமுதல் உருட்டி வச்ச எல்லா உருண்டையும் முடிஞ்சுதே??? எனக்கு நல்லா கறி ஒழுக ஒழுக வேணும் :)

 
On June 25, 2009 at 1:57 AM , யசோதா.பத்மநாதன் said...

:).

உது என்ர பிள்ள சினேகிதியே? எனக்குக் கண்ணும் வடிவாத் தெரியேல்ல!

அவள் நல்ல தமிழ் உடுப்போட வந்தாள்.உது ஆரோ இங்கிலிசு உடுப்போட நிக்குமாப் போல கிடக்கு.

எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல.

 
On June 25, 2009 at 2:03 AM , யசோதா.பத்மநாதன் said...

உந்தப் பலகேல்ல இரு ராசா முதல்.கீழ ஊத்திக் கீத்திப் போடாம வடிவாப் பிடி மோன.மிளகாப் பொரியல் எடுத்தனியே?நேற்றயான் புட்டும் கொஞ்சம் கிடக்கு.அதையும் போட்டு குழைச்சுத் தரட்டே?

அங்க முத்தத்தில ஏதோ வலு ஆரவாரமாக் கிடக்கு.என்னவாக்கும்?

சாப்பிட்டுட்டு ஒருக்கா வாறியே என்னெண்டு பாத்திட்டு வருவம்.ஏதோ சாப்பாட்டுப் பிராக்காத் தான் இருக்க வேணும்.

 
On June 25, 2009 at 2:44 AM , தமிழன்-கறுப்பி... said...

பெரிய கதைபோல கிடக்கு இருங்கோ படிச்சுட்டு வாறன்...:)

 
On June 25, 2009 at 2:47 AM , soorya said...

மிக மிக இதந்தரும் அருமையான பதிவு தோழி.
கீரிமலையை மறக்கமுடியுமா? நாங்கள் ரியூசன் கட் பண்ணீட்டு அடிச்ச லூட்டிகள்...நினைவில் நிழலாடி...
இப்போ அதை எல்லாம் நினைக்க வைத்து நெஞ்சில் நீண்டு பெருமூச்சையும்..ஈற்றில் கண்ணீரையும் வரவைத்தது தங்கள் பதிவு.
நன்றி.

 
On June 25, 2009 at 3:08 AM , யசோதா.பத்மநாதன் said...

உதாருது? தமிழ் முத்தத்தின்ர பேத்தி கறுப்பியே?

இவ்வளவு நாளா எங்க நிண்டனி தங்கம்? ஊரில எல்லாரும் சுகமே? அப்ப ஊர் புதினங்களச் சொல்லணை! உன்ர பொன் வாயால!!

பொங்க பாரன்!

உங்க முத்தத்தில இண்டைக்கு என்னவோ நல்ல ஆரவாரமாக் கிடக்கு.ஓடி வா! ஓடி வா!போய் என்னெண்டு பாப்பம்!

 
On June 25, 2009 at 3:17 AM , யசோதா.பத்மநாதன் said...

சூர்யா! நீங்களா!! நலமா? உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது சூர்யா.

எங்கு போய் விட்டீர்கள் இவ்வளவு நாளும்? இனி நீங்கள் தவறாமல் வருகை தந்தாக வேண்டும்.இது வேண்டுகோளல்ல: கட்டளை!

இது உங்களது முற்றமும் கூடத்தான்.நாமெல்லோரும் ஒரு குடும்பம் சூர்யா.நீங்களும் அதிலொரு அங்கமாக வேண்டும்.

இது என் ஆத்மார்த்தமான விருப்பம்.

 
On June 25, 2009 at 5:07 AM , யசோதா.பத்மநாதன் said...

சூர்யா,

உங்கட பின்னூட்டம் பாத்த சந்தோசத்தில இத கேக்க மறந்திட்டன்.(கேக்கலாமோ?)

அப்ப மகாஜனாவிலயோ ஜூனியன் கொலிஜ்ஜிலயோ படிச்சனீங்கள்?

எவ்வளவு அருமையான பள்ளிக் கூடங்கள் அவை!

 
On June 28, 2009 at 2:04 AM , Unknown said...

//////சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னி திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாப் போறது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்./////

 
On June 28, 2009 at 7:14 AM , soorya said...

தோழிக்கு,
ஈழமுற்றத்துக்கு வருவேன்.
தங்கள் கட்டளையல்லவா?
அதுவும் ஆத்மார்த்தமான வேண்டுகோளாச்சே..!மீறமுடியவில்லை.
ஒரு அங்கத்துவன் என்றில்லாமல்,,,ஒரு பார்வையாளனாக வந்து போகிறேன் சரியா?
நான் படித்தது மகாஜனாவில்.
sooryavinothan@gmail.com
மேலதிக தனிப்பட்ட விசயங்களை அங்கு பகிர்வோம்.
நன்றி.

 
On June 28, 2009 at 5:41 PM , யசோதா.பத்மநாதன் said...

அபிமாறன்,சூர்யா உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து வாருங்கள்.உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களைத் தாருங்கள்.