Author: கானா பிரபா
•2:13 AM
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை நிகழ்வுகளில் இன்று ரதோற்சவ நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வாயிலாகச் சமகாலத்தில் நேரடி ஒலிபரப்பாக எடுத்து வந்திருந்தோம்.

இலங்கை நேரம் காலை 7.30 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெற்ற இந்த நேரடி நிகழ்வை ஒருங்கமைத்து உதவியவர் நம் சக வலைப்பதிவர் விசாகன் குமாரசாமி. கடந்த ஆண்டும் இந்த நிகழ்வை வானொலியில் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் இருந்து சைவமணி திரு சண்முகரத்தினம் அவர்கள் வெகு சிறப்பாக நேரடி அஞ்சல் வர்ணனையைச் செய்து வழங்கியதோடு அவருடன், புலவர் குமாராசாமி அவர்களும், தமிழருவி சிவகுமாரன் அவர்களும் இணைந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த இரண்டரை மணி நேர நிகழ்வின் சில பகுதிகளை இங்கே தருகின்றேன்.

KaraiSivan by kanapraba




விசாகன் குமாரசாமி இந்த நேரடி ஒலிபரப்பில் வழங்கியிருந்த ஈழத்துச் சிதம்பரம் காரைநகர்ச் சிவனின் நடராஜ மூர்த்தம் குறித்த பகிர்வின் எழுத்து வடிவம்


நேரடி அஞ்சலை தாயகத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விழாவின் நாயகன் கனகசபையின் கண் வீற்றிருந்து நல்லாட்சி அருளுகின்ற சிவகாம சுந்தரி சமேத சிவசிதம்பர நடராசப் பெருமான். அதுவும் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜ மூர்த்தம் மிகவும் பிரசித்தமானதும் அழகியல் நுட்பங்களையும் கொண்டது.

இடது பதம் தூக்கி ஆடுகின்ற மிடுக்கான, கம்பீரமான பேரெழில் கொஞ்சும் தோற்றம். திருநாவுக்கரசரின் குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்த சடை, பவளம் போன்ற மேனி, எடுத்த பொற்பாதம் என்ற பாடலின் பொருள் காரைநகர் சிவன் கோவில் நடராசர் சிலை என்றால் அது மிகையல்ல.

நடராஜர் சிலையில் 51 சுடர்கள் இருக்கின்றன. இவை திருவாசகத்தின் 51 பதிகங்களை நினைவூட்டுகின்றது. அபிசேகத்தின் போது உடுக்கை ஏந்திய கையிலும் அக்கினி ஏந்திய கையிலும் இருந்து வழிகின்ற திரவியங்கள் நேரே வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களது தலையில் வீழும். முயலகனை அழுத்தி இருப்பது அவரது வலது கால்ப் பெருவிரல் என்பது இங்கே மிக நுணுக்கமாக படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த எழிலுரு தோற்றத்தை தமிழகத்தில் வருகை தந்த பல அறிஞர்கள் கூட விதந்து போற்றினார்கள். மு. பாஸ்கரத் தொண்டைமான் என்கின்ற அறிஞர் இப்படியான அழகியல் நுணுக்கம் கொண்ட நடராஜர் சிலையை தான் வேறெங்கும் பார்த்ததில்லை என தமிழகத்தின் ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

இந்த நடராசருக்கு அழகிய மஞ்சள் நிறத்திலான செவ்வந்தி மலர்களாலான சாத்துப்படி சிறப்பானது. முடியிலே 5 கொண்டை மாலைகளும், கையிலே தேசிக்காயும், இடையிலே புலித்தோல் போர்த்திய மேனியும், பல அடுக்குகளைக் கொண்ட செவ்வந்தி மலர் மாலைகளால் ஆன கீழ்ச்சாத்துப்படியும் இரட்டைத்திருவாசியும் கொண்ட தோற்றத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை. காணக் கண் கோடி வேண்டும் என்பது இதனைத்தான் என்பது சாலப் பொருத்தமே.



புகைப்படம் நன்றி: காரை வசந்தம்
This entry was posted on 2:13 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: