Author: யசோதா.பத்மநாதன்
•4:15 AM


நேற்றய தினம் ’வானவில்’ என்ற அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.அதில் இருந்த ஒரு கவிதை ஒரு கால கட்டத்து யாழ்ப்பாணத்து வாழ்வு முறையைக் கடித உத்தியில் சுவை படச் சொல்கிறது.

ஈழத்து முற்றத்துக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



எந்தன் தேசத்தின் குரல் - எழுதியவர்;தெய்வீகன்


அன்புள்ள
நண்பனுக்கு,

குளிர்நாட்டில் இருந்து நீயனுப்பிய
துண்டு மடல் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நீ தமிழை மறக்காததையும் நினைத்து.

ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்.

பேச்சுவார்த்தை போலவே இங்கு
எதுவுமே நடக்கவில்லை

கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்
கொக்கத்தடி களவெடுத்த
குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு
போன வாரம் கலியாணம்.
கை நிறையக் காசோடு
பறந்து வந்த கனடாக் கணவான்
கொத்திக் கொண்டு போனான்.

வாசிக சாலை‘அமைச்சரவையில்’மாற்றம்
தண்ணீர்ப்ப்பந்தல் போட்ட காசில்
தண்ணி காட்டிப் போட்டர் எண்டு
பேரம்பலத்தாரைத் தூக்கியாச்சு

உனக்காக உன்னுடன் சேர்ந்து
நானும் கலைச்சுத் திரிந்த
பர்வதம் மகள் மைதிலி
இன்னும் காத்திருக்கிறாள்
றெஜீஸ்டர் பண்ணீட்டுப் போன
ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து

தூக்குக் காவடியில் தொங்கும் போது
றோட்டோரம் நின்று சிரித்து
சிக்னல் கொடுத்த கலாவையே
எங்கட’புட்போல்’ கண்ணன்
கடைசியில கை பிடிச்சிட்டான்

கனகற்ற வளவுக்கு
சுத்து மதில் அடிச்சதால
எங்கட கிறிக்கெற் கோஷ்டி இப்ப
பள்ளிக்கூட வளவுக்கு
இடம்பெயர்ந்திட்டுது.


வழமை போலவே
வள்ளியரிண்ட வளவு
பங்குப்புளி உலுப்பும் போது
இம்முறையும் நல்ல சண்டை
ஊர் கூடி வேடிக்கை
இரண்டு பேரையும் பொலிஸ்
தூக்கிப் போச்சுது

நாங்கள் ஊமைக் கொட்டையால
எறிஞ்சு கால் முறிச்ச
கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு
வடிவக்கான்ர வளவு வாங்கினதோட
இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்
குமார லிங்கத்தார்.

இறைப்புக்கு இஞ்சின் விட்டு
பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தருமர்
மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு
ரெண்டு பெடியளையும் சுவிஸுக்கு அனுப்பீட்டார்

முந்திப் பார்த்தா
மூஞ்சியைத் திருப்பிற பத்மா
இப்ப சாதுவா சிரிச்சிட்டுப் போகுது
புருசனோடு போகும் போது.

வேலியே பத்தி விடுமளவுக்கு
வேகிற வெய்யில்
வேறெ என்ன சொல்ல?

அலாரம் வைத்தெழும்பும்
அவதியான நாடெண்டாலும்
அடிக்கடி கடிதம் போடு
நீ வந்து போன சந்தோசம் வருமெனக்கு.

இப்படிக்கு,
இன்னும் இங்குள்ளவன்.

(நன்றி: வானவில்;தொகுப்பாசிரியர்.லெ.முருகபூபதி;அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கம்;2007 ஜனவரி)


(கிராமத்துக்குத் திரும்பும் ஒருவன் தன் கிராமத்தை அண்டியவுடன் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து ஆற்றங்கர மரமே! அரச மர நிழலே...என்று பாடும் பாடலில் வரும் ஒரு கிராமத்து வாஞ்சையினை ஒத்ததாக இந்தக் கவிதை யாழ்ப்பாணத் தமிழில் கிட்டத்தட்ட போரின் ஆரம்பகாலத்து இளைஞரது வாழ்வியலை சொல்வதைப் போல அமைந்திருக்கிறது.)



சொல் விளக்கம்;பாரதத்துத் தமிழர்களுக்காக!




கொந்தல்: கிளி கோதிய,மரத்தில் இருக்கும் மாங்கனி.

கொக்கத்தடி:கூரான வளைந்த கத்தியுடன் கூடிய மிக நீண்ட தடி.(உயரத்தில் இருக்கும் கனிகளையோ குழைகளையோ வெட்ட இது பயன் படும்) அநேகமாக யாழ்ப்பாணத்து எல்லா வீட்டு வளவுகளிலும் இது இருக்கும்.

வாசிக சாலை: யாழ்ப்பாணத்து ஒவ்வொரு கிராமத்தின் மத்தியிலும் இது இருக்கும்.வாசிக்கும் சாலை; அதனால் வாசிப்பதற்குரிய பத்திரிகைகள்... போன்றன இருக்கும்.இளைஞர்கள் மாலையில் கூடி ஊர்வம்பு,அரசியல்..என்று பலவற்றையும் பேசும் இடமும் கூட.சமூக,கிராம முன்னேற்றம் கருதி அதற்கு தலைவர்,செயலாளர் என்றெல்லாம் ஆட்கள் இருப்பர்.’அமைச்சரவை’ என்று கவிதை குறிப்பிடுவது அந்த நிவாகத்தினரையே.

தண்ணீர்ப் பந்தல்: கோயில் திருவிழாக்காலங்கலில் பாதசாரிகள்,பக்தர்களுக்குப் பந்தல் போட்டு குளிர் பானங்கள்,மோர், தேசிக்காய் கரைசல் என்பன கொடுக்கும் இடம்.பாதசாரிகளுக்கு அது நிழலுமாகும்.

தண்ணி காட்டுதல்: ஏமாற்றுதல்

தூக்கியாச்சு: வெளியேற்றப்பட்டு விட்டார்.

வளவு: காணி

பங்குப் புளி உலுப்புதல்: புளிய மரத்தில் பங்கு போட்டு புளியம்பழம் பெற்றுக் கொள்ளுதல் ஒரு யாழ்.மரபு.அதில் சண்டைகளும் சாதாரணம்.ஒருவர் மரத்தில் ஏறி மரத்தை உலுப்பப் பழங்கள் கொட்டுண்ணும்.துணி அல்லது பாய் விரித்து அவற்றை எடுத்துக் கொள்வார்கள்.

பொலிஸ் தூக்கிப் போச்சுது: இந்த இடத்தில் பொலிஸ் கொண்டு போய் விட்டார்கள் என்ற அர்த்தத்தில் வரும்.

ஊமைக் கொட்டை: ஊமல் கொட்டை என்பதன் மருபு. இது காய்ந்த பனங்கொட்டையைக் குறிக்கும்.

கிடா:மறி: ஆண் ஆடு,மற்றும் பெண் ஆடு

இறைப்புக்கு எஞ்சின் விட்டு: யாழ்ப்பாணம் ஆறுகள் அற்ற வரண்ட செம்மண் பூமி. அங்கு கிணறுகள் வழியாகவே பாசனம் செய்யப் படுவது வளமை.சில ஏழை விவசாயிகளிடம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இருப்பதில்லை. அதனை வாடகைக்கு அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.அதனைக் குறிப்பது இது.

பிழைப்பு: வருமானம்

முந்தி: முன்னர்

சாதுவா: கொஞ்சமாக

(இளைஞர்களிடையே இழையாக ஓடும் ஒரு நட்பின் அன்னியோன்னியம் அவற்றில் தொனிப்பது இக் கவிதையின் சிறப்பு.இப்போது மறைந்து போன ஒரு பண்பாட்டின் மிருதுவானதோர் இழையும் கூட.)
|
This entry was posted on 4:15 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On July 12, 2011 at 6:54 PM , நிலாமதி said...

மீண்டும் ஒருதாயக் நினைவை மனதில் எழச் செய்கிறது பகிர்வுக்கு நன்றி

 
On July 15, 2011 at 11:09 AM , மதுரை சரவணன் said...

thanks for sharing.. vaalththukkal

 
On July 16, 2011 at 5:46 AM , ந.குணபாலன் said...

தேசிக்காய்- எலுமிச்சங்காய்
நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் ஆயிரம்.